ஆயித்தியமலை அன்னையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) அதிகாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பாதயாத்திரையில் மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 5.30 மணியளவில் பாதயாத்திரை ஆரம்பமானது.
புனித மரியாள் பேராலயத்திலிருந்து வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம், வலையிறவுப் பாலம் மற்றும் வவுனதீவு ஊடாக ஆயித்தியமலை நோக்கி பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விசேட சொரூபமும் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை (06) நிறைவடையவுள்ளது.
இதேவேளை, செங்கலடியிலிருந்தும் இன்று அதிகாலை ஆயித்தியமலை நோக்கி மற்றுமொரு பாதயாத்திரை இடம்பெற்றதுடன், அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி நாளை காலை இடம்பெறவுள்ள நிலையில், பெருமளவான பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


