தலைமன்னாரில் பனந்தோப்பில் திடீர் தீப்பரவல்
மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் உள்ள பனந்தோப்பில் இன்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவல் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்துள்ளனர்.
எனினும், தீ தொடர்ந்து பரவி வருவதால், தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பனந்தோப்பை அண்மித்த பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகள் காணப்படுவதால், குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.