தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் – சுகாஷ் கண்டனம்
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழர் தாயகப் பகுதியில் அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர், அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவதூறுகள், விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாஷ் தெரிவித்தார்.
மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் தமது கட்சி தொடர்ந்தும் அரணாக நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் காணி ஒன்றின் மீது கல்லெறிந்து அங்கிருந்த சிசிரிவி கமரா சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாஷ் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளிகள் மற்றும் குறித்த நபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவை இருந்தபோதிலும், பொலிஸார் அவரை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் அதிகாலை 3 மணியளவில் விடுவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது அப்பட்டமான சட்டவிரோத செயற்பாடு எனத் தெரிவித்த சுகாஷ், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
மேலும், வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கும், சிங்களக் கட்சிகளை வடக்கு, கிழக்கிலிருந்து ஜனநாயக ரீதியாக வெளியேற்றுவதே வழி எனவும் அவர் தெரிவித்தார்.