தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபியே இவ்வாறு உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியை தற்போது விமர்சிப்பவர்கள்கூட தந்தை செல்வாவின் செயற்பாடுகளை விமர்சிப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.
அத்தகைய தலைவரின் நினைவுத் தூபியை உடைத்து சேதப்படுத்தியுள்ளமை வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை என்றபோதிலும், அவை ஒரு நினைவுத் தூபியை உடைக்கும் அளவுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் அனைவரது மனதிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பவத்துடன் தொடர்புடைய விஷமிகளை உடனடியாகக் கைது செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.