இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!
சவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் நேபாளம் மற்றும் சீனாவில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (30) தீவிரமாக ஈடுபட்டனர்.
கடந்த புதன்கிழமையன்று பனி, பாறைகள், சேறு, சிதைவுகள் கலந்த பெருவெள்ளம் மலைப்பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகள் வழியாகப் பாய்ந்து பரவலான அழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நேபாள-சீன எல்லைப் பகுதியின் இருபுறமும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளளனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் சீனா தொடர்புபடுத்தும் இந்த பேரிடரால் 90,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம், 781 பேர் உயிரிழந்ததாகவும், 2,502 பேர் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சீனப் பகுதியில், கியிரோங் (Gyirong) மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்துடனான முக்கிய எல்லைக் கடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள திபெத்தில், 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினர் காணாமல் போனதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
பேரழிவின் அளவு, கரடுமுரடான இமயமலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கியுள்ளது.
அண்மைய மழையைத் தொடர்ந்து திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால், குடியிருப்பாளர்களும் மீட்புப் பணியாளர்களும் உயரமான இடங்களுக்குச் சென்றுள்ளதாக நேபாள காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், நேபாளத்தில், வெள்ளத்தால் சூழப்பட்ட ஐந்து நீர்மின் திட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ‘அப்பர் திரிசூலி’ (Upper Trishuli) வளாகமும் அடங்கும்.
அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றில் சுமார் 350 பேர் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தனர்.
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறப்புப் படைக் குழுக்களுடன் இணைந்து, சுமார் 10,000 நேபாள இராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேபாள இராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று அந்தத் தொலைதூரப் பகுதிக்கு கனரக இயந்திரங்களை விமானம் மூலம் கொண்டு சென்றது.
மீட்புக் குழுவினர் ஒரு சுரங்கப்பாதையின் நுழைவாயிலை அடைந்து, அணுகலைத் தடுத்திருந்த குப்பைகளை அகற்றும் பணியைத் தொடங்கினர்.
அணுகல் பாதுகாக்கப்பட்டவுடன், ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் கேமராக்களை ஏந்திய குழுக்கள் உள்ளே நுழையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதை மீட்புப் பணிகள், டிஎன்ஏ பரிசோதனை, சடலங்களைக் குளிரூட்டப்பட்ட நிலையில் சேமித்தல் மற்றும் சிதைந்த எச்சங்களைத் தடயவியல் ரீதியாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட சிறப்புத் துறைகளில் நேபாளத்திற்கு சர்வதேச உதவி தேவைப்படுவதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி தெரிவித்தார்.