கடலில் மூழ்கி மாயமானவர்களில் மூவர் ச*டலமாக மீட்பு; சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.!
பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் (30) மாலை 5.30 மணியளவில் பட்டம் விடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஜா-எல, நிவந்தம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், அவர்களின் அண்டை வீட்டைச் சேர்ந்த (உறவினர்) இரு சிறுவர்களும் இந்த சோக சம்பவத்திற்கு இரையாகியுள்ளனர்.
கடலில் மூழ்கி மாயமானவர்களை மீட்பதற்காக உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இந்நிலையிலேயே, இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாயான மலிஷா பெர்னாண்டோ (35 வயது) என்பவரின் சடலம் துங்கல்பிட்டிய சரக்குக்கந்த கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
அத்துடன், அவரது 4 வயது மகளான வினுதி விதம்சவின் சடலம் பமுனுகம வஹட்டியகொட கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், அவர்களுடன் சென்ற 11 வயதுடைய விஷ்வா பிரசாதி என்ற சிறுமியின் சடலமும் சரக்குக்கந்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இவர்களது முகவரி இலக்கம் 170, நிவந்தம, ஜா-எல என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, காணாமல் போன 13 வயதுடைய சதீஷ அனுஹஸ் என்ற மூத்த சிறுவனைத் தேடும் பணிகளில் இலங்கை கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்டு கரை ஒதுங்கியுள்ள சடலங்கள், நீதவான் பரிசோதனைகளின் பின்னர் மேலதிக பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் ராகம பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

