ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளி காரணமாக கண் பாதிப்பு; 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட கடுமையான ஒளியூட்டல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை விடுதி பிரிவில் தற்போது வரை 157 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்களில் 58 பேர் ஆண்களும், 44 பெண்களும், 55 குழந்தைகளும் உள்ளடக்குகின்றனர். இவர்களை அனுமதிப்பதற்கு புதிதாகவும் இரண்டு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பலருக்கு கண்ணில் கடுமையான வலி, எரிவு, கண் திறப்பதற்கு சிரமம் என்பன ஏற்பட்டுள்ளன. மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக வைத்தியசாலையில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதுவரை வைத்தியசாலைக்கு வந்தவர்களுக்கான ஆரம்பகட்ட சிகிச்சை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மேலதிகமான ஊழியர்களும் அந்த பகுதியில் தற்போது கடமையில் உள்ளார்கள்.
எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் போதியளவில் இருக்கின்றன. இது தவிர அனுமதிக்கப்பட்டவர்களுக்கான உணவு வசதிகளும், படுக்கை வசதிகளும் தற்போது வரை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான பாதிப்பு உள்ளவர்கள் மேலும் வீடுகளில் இருந்தால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சையை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். அவ்வாறானவர்கள் வருகின்ற பட்சத்தில் இரவும் பண்படுத்திகளும் கண் சிகிச்சை பிரிவும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.