நியூசிலாந்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் குழு மன்னார் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடல்.!
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இலவச மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த குழுவினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (20) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து உரையாடி உள்ளனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு நேற்று விஜயம் செய்த குறித்த குழுவினரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் அவர்களின் குறித்த செயல்பாட்டை பாராட்டிய அரசாங்க அதிபர் புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் பிறந்த நாட்டையும், மாவட்டத்தையும் நேசித்து மன்னார் மாவட்ட மக்களுக்காக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக குறித்த குழுவினருக்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று நாட்கள் மேற்கொண்ட இலவச மருத்துவ முகாமில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக மாந்தை மேற்கில் மேற்கொள்ளப்பட்ட குறித்த மருத்துவ முகாம் ஊடாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற மக்கள் பலர் பயனடைந்துள்ளனர். பின்தங்கிய கிராம மக்களும் பயனடைந்துள்ளனர். எனவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரச அதிபர் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.
குறித்த குழுவினர் மன்னார் உப்புக்குளம், விடத்தல் தீவு மற்றும் அந்தோனியார்புரம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக இலவச மருத்துவ முகாமை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

