காலாவதியான பொருட்கள் விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!
நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு, யாழ்ப்பாண மேலதிக நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில், பொது சுகாதார பரிசோதகரால், அது கண்டறியப்பட்டு , நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி வைத்திருந்த இதே குற்றச்சாட்டுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னரும், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தண்டப் பணம் செலுத்தப்பட்ட விடயம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதனையடுத்து, குறித்த விற்பனை நிலையத்தின் வியாபார உரிமத்தை இரத்து செய்த நீதிமன்று, அந்த உத்தரவை நல்லூர் பிரதேச சபைக்கு அனுப்புமாறும் கட்டளையிட்டது.
குறித்த விற்பனை நிலையமானது, இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளை என்பது குறிப்பிடத்தக்கது.