சொகுசு பேருந்து மீது தீ வைப்பு.!
கடுவலை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று, இன்று புதன்கிழமை (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவரால் தீ வைத்து முழுமையாக எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்கள் இன்றைய தினம் அதிகாலை வேளையில் குறித்த சொகுசு பேருந்து மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவலை – மாத்தறை பாதையில் சேவையில் ஈடுபடும் பேருந்தே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகடுவலை – கொள்ளுப்பிட்டி பாதையில் சேவையில் ஈடுபடும் மேலும் இரு பேருந்துகளுக்கும் தீ பரவியதால் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
சம்பவம் நடந்த போது எரிக்கப்பட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் இருந்த மற்றொரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அவர்களை எச்சரித்ததைத் தொடர்ந்து, இருவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும் தாக்குதலுக்கான பின்னணியைக் கண்டறிவதற்கும் கடுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.