தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பெரோக்சைட் (Hydrogen Peroxide) இரசாயனத்தை பருகியதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமி ஆவார்.
வவுனியாவிலிருந்து சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே இருந்த நிலையில், சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த இரசாயன திரவத்தை பருகியுள்ளார்.
திரவத்தை பருகிய உடனேயே சிறுமியின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் வெளியேறியதாக அவரது தந்தை ஜே. விக்னேஸ்வரன் மரண விசாரணையில் சாட்சியமளித்துள்ளார்.
சிறுமி இரசாயன திரவத்தை பருகியதை அறிந்ததும் உடனடியாக பன்விலதென்ன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை எனவும், உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறுமி குறித்த திரவத்தை நீர் என நினைத்துக் குடித்தமையாலேயே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.