மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!
மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன் முதல் கொட்டகலை தலவாக்கலை வட்டகொட கிரேட் வெஸ்டன் நானுஓயா வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையில் கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு இடத்தில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய மோசமான வானிலை காரணமாக கட்டுமானத்திற்குத் தேவையான கற்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை சீரடைந்து, சீரான வானிலை நிலவும் பட்சத்தில், கிரேக்லி தோட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் புனரமைப்புப் பணிகளை இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள இடர்களால் செப்பனிடும் பணி சற்று மந்தமாக இடம்பெற்று வருகின்றன.
தொடர்ந்து இப் பகுதியில் காலநிலை சீராகும் பட்சத்தில் வேகமாக பணிகள் இடம்பெற்று பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெறும் என தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார்.

