காணி விடுவிப்பு தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே தங்களது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் என்றும், அவற்றை எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை எனவும், இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ வழங்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.
காணி சுவீகரிப்புக்கு எதிராக நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், மீண்டும் காணிகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது பெரும் அநீதியாகும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இவ்விடயத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.
அத்துடன், மயிலிட்டி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் செ. விஜயராஜ், வலி. மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. சபேசன் மற்றும் காணி விடுவிப்புச் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



