உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
66 பார்வைகள்

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் உரிய துறைசார்ந்த அதிகாரிகளிடமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதன்பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளித்துள்ளார்.

நடாளுமன்றக் குழு அறையில் 21.07.2026 இன்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – மயிலிட்டி, மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தக்கூடியவாறு நிலைமைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பாக 1973ஆம் ஆண்டு அப்பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும்வரை, அப்பகுதியைச் சேர்ந்த 1000வரையான மீனவ குடும்பங்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தினைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குறித்த மயிலிட்டித் துறைமுகத்தினைப் பயன்படுத்த முடியாதநிலை காணப்படுகின்றது.

இது தொடர்பில் அங்குள்ள மீனவர்கள் என்னிடம் முறையீடு செய்ததற்கமைவாக கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தேன்.

எல்லைதாண்டி அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும்போது பறிமுதல் செய்யப்பட்ட இந்திய இழுவைப் படகுகள் மயிலிட்டித் துறைமுகத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு துறைமுகத்தில் இந்திய இழுவைப் படகுகள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற பகுதி தவிர்ந்த மிகுதிப் பகுதியை தென்னிலங்கை மீனவர்களே பயன்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் என்னிடம் முறையீடு செய்தனர்.

எனவே, எமது தமிழ் மீனவர்களுடைய வயிற்றில் அடிக்கவேண்டாமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

துறைமுகத்தின் அருகில் இருக்கும் எமது மீனவர்கள் அந்தத் துறைமுகத்தினைப் பயன்படுத்த முடியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம். எமது மீனவர்களும் தமது அன்றாட வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே எம்மால் பார்க்கமுடிகின்றது.

எனவே தயவுசெய்து மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை உரியவகையில் அப்புறப்படுத்தி, அப்பகுதி மீனவர்கள் துறைமுகத்தினை தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இந்நிலையில் இதன்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளிக்கையில்,

இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் சார்ந்த அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

எனவே அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பிற்பாடு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அனுர கருணாதிலக இதன்போது பதிலளித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

51 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

50 0 0