பொலன்னறுவை மாவட்டம், அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிம்பொகுண, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் கொடூரத் தாக்குதலாக மாறியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பெண், ஆபத்தான நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரலகங்வில பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பெண்ணின் கணவரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









