தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான சுஜித் புஷ்பகுமார தெரிவித்ததாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் கவலையளிக்கின்றது. இன்று ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார திஸாநாயக்க, அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.
சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் பாதுகாப்பு அரசின் பொறுப்பாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் இவ்வாறு மரணமடையும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது? இந்த நிலைமையை ஜனாதிபதி இன்று நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பெருமளவிலான கைதிகள் தற்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்களைப் பாதுகாக்குமாறு கோரி பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.” – என்றார்.
தொடர்ந்து டெங்கு பரவல் குறித்துப் பேசிய அவர், “நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மொரட்டுவை பகுதியில் இந்த நோய் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறானதொரு ஆபத்தான சூழலிலும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் டெங்கு ஒழிப்பை முன்னிறுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்து இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வரை காத்திருக்காமல், அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.” – என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜா – எல தொகுதியின் அமைப்பாளர் ரங்க கொடிதுவக்கு தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு டெங்கை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு வெறும் ஊடகக் காட்சிகளை மட்டுமே நடத்தி வருகின்றது. கடந்த காலங்களில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் டெங்கு ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இறங்கின. ஆனால், தற்போதைய அரசிடம் அதுபோன்ற எந்தவொரு தயார்நிலையோ அல்லது முறையான வேலைத்திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே, சிறைச்சாலைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தி கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு ஆபத்திலிருந்து மக்களை மீட்பதற்கும் அரசு வெறும் விளம்பரங்களை விடுத்து, உடனடியாகத் தலையிட்டு முறையான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.” – என்றார்.











