பெருமளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையை பாரவூர்தி ஒன்றில் கடத்திச் சென்ற சாரதி ஒருவரை நீர்கொழும்பு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை (21) கைது செய்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் இந்தியாவிலிருந்து மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கேரளா கஞ்சா பொதிகள், சிறிய பாரவூர்தி ஒன்றின் மூலம் குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளன.
புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நீர்கொழும்பு மஹா ஹுனுபிட்டிய பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சுமார் 85 கிலோ கிராம் எடையுள்ள இந்தக் கேரளா கஞ்சா, 40 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பின்னர் அவை 2 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக மதுவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மொத்த பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தியில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதுடன், அவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் பாரவூர்தி சாரதி மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சனிக்கிழமை (21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.