மகிந்தவின் ஊழல் மோசடி; வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்.!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து 60 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (19) நீதிமன்றத்தில் அறிவித்தது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஏர்பஸ் இலஞ்ச விசாரணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்திரசேனவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தச் சமர்ப்பணத்தின்படி, குறித்த 60 மில்லியன் ரூபா மூன்று சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் பின்னணியாக, 2012 – 2013 காலப்பகுதியில் SriLankan Airlines நிறுவனத்திற்காக விமானங்களை வாங்கிய ஒப்பந்தத்தில் ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, ஏயார் பஸ் நிறுவனத்துடன் 6 A330 மற்றும் 4 A350 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான மோசடி குறித்த தகவல்கள் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் வெளிச்சத்திற்கு வந்தன.
அந்த விசாரணையில், 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இலஞ்சம் வழங்கப்படவிருந்ததாகவும், அதில் 2 மில்லியன் டொலர் தொகை சந்திரசேனாவின் மனைவியுடன் தொடர்புடைய புருனேயைச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
மேலும், அந்த நிதி புருனேயிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள கணக்குகள் வழியாக பல கட்டங்களாக மாற்றப்பட்டிருந்ததுடன், சிங்கப்பூரிலிருந்து இலங்கையிலுள்ள கணக்குகளுக்கும் பணம் பரிமாறப்பட்டிருந்தது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின்வின் மகனான சமிந்திர இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு அவரது வங்கிக் கணக்கில் 160,000 அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கிற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.