அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலங்குவானூர்திகள் அனுப்பி வைப்பு.!
அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக உலங்குவானூர்திகள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10 உலங்குவானூர்திகளும் மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த உலங்குவானூர்திகள், இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த உலங்குவானூர்திகளையும் இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலங்குவானூர்திகளைப் பார்வையிடுவதற்காக இலங்கை விமானப்படையின் தூதுக்குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தது. இந்த பெறுமதியான நன்கொடைக்காக இலங்கை தனது மனமார்ந்த நன்றியை அமெரிக்காவிற்கு தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.