இணையவழி மோசடி: 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!.
இலங்கையில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் இயங்கி வந்த பாரிய இணையவழி மோசடி வலையமைப்பை இலக்கு வைத்து இன்று விசேட சுற்றிவளைப்புச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ புலனாய்வு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களங்கள் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையில், அந்தப் பகுதிகளில் உள்ள ஐந்து தங்குமிட விடுதிகள் முற்றுகையிடப்பட்டு 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனைத்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அதிக விசாரணைகள் மூலம், இந்தச் சட்டவிரோத வலையமைப்புடன் தொடர்புடைய பிற நபர்களையும் கண்டறிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.