மேலதிக வகுப்புக்குச் சென்ற சிறுமி உயிரிழப்பு.!
அனுராபுரம், கெபித்திகொல்லேவ – பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் வான் மோதி விபத்துக்குள்ளான 9 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து நிகழ்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார் என்று பதவிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி குறித்த சிறுமி மேலதிக வகுப்பொன்றுக்குச் செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்ட போது, வேகமாக வந்த வான் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கந்தூருவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த சனுல்லியா என்ற 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
விபத்து நிகழ்ந்த வேளையில், சிறுமியை மோதிய வான் அவ்விடத்தில் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது. இருப்பினும், பின்னர் அந்த வான் சாரதி தானாகவே முன்வந்து பதவிய பொலிஸ் நிலையத்தில் வானுடன் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற இந்த அநியாய மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.