வாகன இலக்கத் தகடுகள் குவிந்துள்ளதால் களஞ்சிய சாலைகளில் நெருக்கடி.!
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் இதுவரை பெற்றுக்கொள்ளாததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட இலக்கத் தகடுகள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இவை பெருமளவில் குவிந்திருப்பதால், பணியாளர்கள் தமது அன்றாட நிர்வாகப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதேவேளை, ஏனைய மாகாணங்களுக்கு மொத்தம் 1,46,712 இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.இதன் பின்னணியில், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் விரைவாகத் தங்களுக்குரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.