யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் வைத்தியரின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை.!
தொல்புரம் பகுதியில் அமைந்துள்ள பானாவெட்டி வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வே. குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும், பிரதேச பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம், நேற்று (24.02.2026) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது.
தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இவ்வைத்தியசாலையினால் பயன்பெறுகின்றனர். வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வரும் இவ்வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டுமெனவும் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வைத்தியர் வே. குருபரன் பொறுப்பேற்ற பின்னர் வைத்தியசாலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால், நடைபெற்று வரும் பணிகள் தடையின்றி தொடர்வதற்காக, மருத்துவர் வே. குருபரனை குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளாவது தொடர்ச்சியாக பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை கடிதம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.