மாக்கந்துரே மதுஷ் சுட்டுக் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் புதிய விசாரணை.!
பாதாள உலகக் குழுவின் தலைவராகவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவராகவும் குற்றஞ்சாட்டப்பட்ட மாக்கந்துரே மதுஷ், பொலிஸ் காவலில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அதிகாலை, கொழும்பு மாளிகாவத்தை அரச அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் வைத்து மதுஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோகிராம் போதைப்பொருளை மீட்க அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு ஒளிந்திருந்த எதிர்த்தரப்பு குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக அப்போதைய பொலிஸ் தரப்பு அறிவித்தது.எனினும், பலத்த பாதுகாப்பிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலும் இருந்த ஒருவரை மட்டும் துல்லியமாக குறிவைத்து எவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற கேள்வி இதுவரை பதிலின்றி உள்ளது.
வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மதுஷ், நீண்டகாலம் குற்றப் புலனாய்வு பிரிவு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த காலப்பகுதியில், பல அரசியல் நபர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் அவருக்கு இருந்ததாகக் கூறப்பட்ட தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டதும், பின்னர் அவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.மதுஷுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் நோக்கில் திட்டமிட்டு இந்தச் சம்பவம் நடத்தப்பட்டதாக சில சமூக அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன.
ஐந்து ஆண்டுகள் கடந்தும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், குடும்பத்தினரின் மற்றும் சமூக அமைப்புகளின் கோரிக்கைக்கு இணங்க தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த புதிய விசாரணையின் மூலம், மதுஷின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் யார்? அவரது பெருமளவு சொத்துக்கள் தற்போது யாரின் கட்டுப்பாட்டில் உள்ளன? என்பன உள்ளிட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.