வர்த்தக அமைச்சு நிதி முறைகேடு: முன்னாள் செயலாளர் உட்பட மூவர் கைது.!
வர்த்தக அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார உட்பட மூன்று சந்தேகநபர்களை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று மாலை கைது செய்துள்ளது.
வர்த்தக அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்த விவகாரங்கள் தொடர்பாக, ஆணைக்குழு நீண்டகாலமாக இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. இந்த விசாரணைகளின் போது திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் அந்த அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் அடங்குவதாக ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.