அக்குரேகொட இரட்டைக் கொலை: விசாரணைகள் 80 சதவீதம் நிறைவு — பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.!
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 13ஆம் திகதி, அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக 12 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மேலதிக முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.