மூன்று நாடுகளின் புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு.!
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளின் தூதுவர்கள், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் கையளித்துள்ளனர்.இந்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்படி, கியூபா குடியரசின் புதிய தூதுவராக பாட்ரிசியா லசாரா பெகோ குவேரா, கட்டார் நாட்டின் புதிய தூதுவராக ஹமத் முகமது அப்துல்லா அல் சனத் அல் தோசாரி, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக தோமாஷ் மெஞ்சின் ஆகியோர் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
பத்திரங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, புதிய தூதுவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.