மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு புதிய கணினி மையம் – விமானப்படை கையளிப்பு!
இலங்கை விமானப்படை தனது 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு புதிய கணினி மையம் ஒன்றை அமைத்து வழங்கியுள்ளது.விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப கணினி மையம் நேற்று பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தில் 15 மேசைக்கணினிகள், இடையறாத மின்விநியோக அமைப்புகள் மற்றும் இணைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் மாணவர்கள் நவீன கணினி வசதிகளை பயன்படுத்தி தங்கள் கல்வித் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றனர்.
75ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, நாட்டின் பல கிராமப்புறப் பாடசாலைகளிலும் இதுபோன்ற கணினி மையங்களை அமைக்கும் திட்டத்தை விமானப்படை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு தேவையான கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகளை மட்டக்களப்பு ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.
கணினி மையத் திறப்பு நிகழ்வில் விமானப்படை மின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டி ஆராச்சி, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் குரூப் கேப்டன் சானக சூரியஆராச்சி, விமானப்படை அதிகாரிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.