மத்திய வங்கக் கடலில் ஏற்பட்ட சீற்றம் – மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில், இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் கிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த வளிமண்டலத் தொகுதியின் தாக்கத்தால் குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் வாய்ப்பு இருப்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.