ஏணி முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!
அனுராதபுரம் – கஹடகஸ்திகிலிய பகுதியில் மரம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏற முற்பட்டபோது, ஏணி முறிந்து கீழே விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த தெரியவருவதாவது,
நேற்று திங்கட்கிழமை பகல் வேளையில், கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவர் ஒருவர், மரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏறுவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது, அவர் பயன்படுத்திய ஏணி எதிர்பாராத விதமாகத் திடீரென முறிந்து விழுந்துள்ளது.
ஏணியிலிருந்து கீழே விழுந்தமையால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.