உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 169ஆவது பிறந்த தின நிகழ்வு.!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் தேவையற்ற விடயங்களில் ஈர்க்கப்படுகின்ற நிலைமை அதிகரித்துள்ள நிலையில் நல்லொழுக்கம் உள்ள அமைப்புகளில் மாணவர்கள் இணைந்திருப்பது அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தினை அமைக்கும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.
உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 169ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று(22) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரின் பிறந்த தினம் மட்டக்களப்பு நீரூற்று பூங்காவிலுள்ள சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச்சிலை அருகாமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணிய சங்கத்தின் தலைவருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட சாரணிய ஆணையாளர் ஏ.நிசாந்தன் உட்பட சாரணிய உதவி ஆணையாளர்கள், சாரணிய ஆசிரியர்கள், சாரணிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மகாத்மா காந்திப் பூங்காவில் இருந்து சாரணிய மாணவர்களின் ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு பேடன் பவலின் உருவச்சிலையருகில் நிறைவுபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிலையருகில் சாரணியத்தின் தந்தையருகில் பிறந்த தின நிகழ்வுகள் நடைபெற்றன.
சாரணிய தந்தையின் உருவச்சிலைக்கு சாரணிய ஆணையாளரினால் கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன் 169ஆவது பிறந்த தின கேக் வெட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குருளைச்சாரணர்கள். இளைஞர்கள் சாரணர்கள், பெண் சாரணர்கள், திரி சாரணர்கள் உட்பட சாரண ஆசிரியர்கள் அடங்கலாக 500 சாரணர்கள் பங்குபற்றினர்.
உலகில் சமாதானத்தினை பரப்பும் வகையில், 1907ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிறின் தீவில் 20 சிறார்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பேடன் பவுலின் மனைவி லோறா பேடன் பவுளினால் பெண்கள் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்படடது. முதன் முதலாக யுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த சாரணர் அமைப்பு செயற்பட்டது.
உலகின் 147 நாடுகளில் 25 மில்லியன் பேர் சாரண இயக்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,
நான் சாரணராக எனது பாடசாலையில் இருந்தபோதிலும் எமது பாடசாலையில் அதனை தொடர்ந்து முன்கொண்டு செல்லமுடியாத நிலையில் மேலதிக பதக்கங்களை என்னால் பெறமுடியில்லை. பேடன் பவல் இந்த அமைப்பினை சாதாரண அமைப்பாக மட்டும் உருவாக்கவில்லை. ஒழுக்கம், தன்னம்பிக்கை, சமூக பொறுப்பு உட்பட பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியதாகவே அதனை ஆரம்பித்தார்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் தேவையற்ற விடயங்களில் ஈர்க்கப்படுகின்ற நிலைமை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நல்லொழுக்கம் உள்ள அமைப்புகளில் மாணவர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கல்வி மட்டும் மாணவர்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்காது. இவ்வாறான வெளிக்கள செயற்பாடுகளே சமூகத்தில் முன்னோக்கி செல்வதற்கான சக்தியை தரும்.







