சேதமடைந்த வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம்.!
மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களினால் வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதியை திருத்தி தர வேண்டும் எனக் கோரி அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) முன்னெடுத்திருந்தனர்.
அம்பாறை மாவட்டம் கல்ஓயா ஆற்றிலிருந்து கனரக வாகனங்களினால் மணல் கொண்டு செல்லப்படும். குறித்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ள போதிலும் கல்ஓயா ஆற்றுக்கு அருகில் உள்ள எட்டு குடும்பங்கள் குறித்த வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீதியை மறித்த அப்பகுதி மக்கள் டயர்கள் வைத்து வாழை மரங்களை நட்டு இந்தப் போராட்டத்தை தொடங்கினர். இதன் காரணமாக அப்பகுதியினால் பயணம் செய்த மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அப்பாதையால் செல்ல முடியவில்லை. அத்துடன் குறித்த வீதியினை மணல் மற்றும் செங்கற்களை கொண்டு செல்லும் இக்கனரக வாகனத்தை செலுத்துபவர்கள் அதை சரி செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வீதியில் தினமும் ஏராளமான மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் அம் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மழை பெய்யும் நாட்களில் சேறும் குழியுமாக மாறும் இந்த வீதி மழை அற்ற நாட்களில் தூசியால் மூடப்பட்டிருக்கும் என மக்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த வீதி திருத்தப்படும் வரை வீதி திறக்கப்படாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளரும், அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சனத் சந்திரதிலக சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
மணல் அனுமதிப் பத்திரதாரர்கள் குறித்த வீதியினை திருத்தும் வரை அவ்வீதி திறக்கப்படாது என அவர் போராட்டக்காரர்களிடம் கூறினர்.


