கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்.!
2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (3) நடைபெற்றது.
கல்முனை வர்த்தகர் மர்ஹும் எம்.பி. மொஹிதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் அதிபருமான எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முன்னாள் பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல். ஹாஜா 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான கடந்தகால செயற்பாடுகளை விளக்கமாக எடுத்துரைத்தார். அவை சபையோரால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் கடந்தகால செயற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத சில விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும் நிகழ்கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் பாடசாலையின் கல்வி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் முன்மொழிவுகளை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொருளாளர் கடந்தகால வரவு – செலவுக் கணக்கை சபையில் சமர்ப்பித்ததுடன் சபையோரால் விவாதிக்கப்பட்டு கடந்தகால வரவு – செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில் 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான புதிய பழைய மாணவர் சங்க நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி, சங்கத் தலைவராக அதிபர் எம்.எஸ்.எம். பைசால், செயலாளராக யூ.எல். ஹாஜா, பொருளாளராக எஸ்.என். ஹஸ்மி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், உப தலைவர்கள், உப செயலாளர்கள், உப பொருளாளர், கணக்காய்வாளர், ஊடகப் பொறுப்பாளர், விளையாட்டு பொறுப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.