உள்ளூராட்சி வாரம்; திருக்கோவில் பிரதேச சபையால் வடிகான்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை.!
“வளமான நாடு – அழகான வாழ்வு” (புனருதயே புரவர) என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் – 2026 நிகழ்ச்சித் தொடரின் நான்காம் நாள் நிகழ்வாக திருக்கோவில் பிரதேச சபையினால் சுகாதாரம் மற்றும் துப்புரவு தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ், பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் வாழ்வதற்கு உகந்ததுமான சூழலை உருவாக்கும் நோக்கில் 2026 உள்ளூராட்சி வார நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி “சுகாதாரம் மற்றும் துப்புரவு தினம்” மற்றும் “சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினம்” ஆகியவற்றை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபையினால் விசேட துப்புரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவர்களின் பணிப்புரையின் பேரில் இடம்பெற்ற இந்நடவடிக்கையின் போது, நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் காணப்பட்ட வடிகான்கள் மற்றும் நீர் தேங்கக் கூடிய இடங்கள் துப்புரவு செய்யப்பட்டன.
இந்நடவடிக்கையில் திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இணைந்து பங்கேற்றனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணும் நோக்கில் இவ்வாறான துப்புரவு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்வு” என்ற இலக்கை நோக்கி, பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் வாழ்வதற்கு உகந்த நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்கிறது.




