2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு : ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு டோனிக்கு உத்தரவு!
2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் டோனியின் வாக்குமூலத்தை காணொளியாகப் பதிவு செய்யக் கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி. சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு தோனிக்கு சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் தமக்கு எதிராக அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி. சம்பத்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக மகேந்திர சிங் எல்னி ரூ.100 கோடி மானநஷ்டஈடு கோரி 2014ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், டோனியின் வாக்குமூலத்தை காணொளி வடிவில் பதிவு செய்வதற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி சம்பத்குமார் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக நீதித்துறை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், முழுமையான காணொளிப் பதிவை எந்தவிதத் திருத்தமும் இன்றி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
மேலும், டோனியின் வாக்குமூலத்தை தனியார் இடங்களில் பதிவு செய்யாமல், நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அரசு கட்டிடத்திலோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சம்பத்குமார் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் டோனிக்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.