மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இது குறித்து மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், வர்த்தக சங்கத் தலைவருமான புஷ்பாவிஷ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே குளவி கொட்டுக்கு இலக்காகி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் அதிகாரிகள், அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், தற்போது சிறுத்தைப்புலிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளமை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுத்தைப்புலிகள் தற்போது தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கவ்விச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொட்டகலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற சில சம்பவங்கள் கண்காணிப்பு கமராக்களிலும் பதிவாகியுள்ளதாக தெரிவித்த புஷ்பா விஷ்வநாதன், அண்மையில் கொட்டகலை எரிங்டன் பகுதியிலும், கொட்டகலை நகரிலுள்ள ஜெயராஜ் மாவத்தையிலும் சிறுத்தைப்புலிகள் நாய்களை கவ்விச் சென்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறினார்.
இதேவேளை, பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் அண்மையில் பெண் ஒருவர் சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு இலக்காகி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவதும், சிறுவர்கள் வீடுகளுக்கு வெளியே விளையாடுவதும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவிக்கும்போது, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சிறுத்தைப்புலிகள் பிடிபட்ட பின்னர் அவற்றை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினர்.
மேலும், பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை நிலப்பரப்புகள் படிப்படியாக காடுகளாக மாற்றப்பட்டு வருவதால், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும் புஷ்பா விஷ்வநாதன் குறிப்பிட்டார்.
தற்போது சில பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 25 சதவீதமான நிலப்பரப்புகள் காடுகளாக மாரிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் இணைந்து உடனடி மற்றும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புஷ்பா விஷ்வநாதன் வலியுறுத்தினார்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்டகாலத் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.