செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்.!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் போதிய நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளை திங்கட்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமியின் சோகமான படுகொலையே செம்மணி மனிதப் புதைகுழி கண்டறியப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 600 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக, போதிய நிதியுதவியுடன் கூடிய சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்றும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென் கோரிக்கை விடுத்துள்ளார்.