“மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை” – பிரதி அமைச்சர்
ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உணரக்கூடியதுடன், தமது கருத்துக்களை விமர்சன ரீதியாக வெளிப்படுத்தக்கூடிய இடங்களாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பானதும் தரமானதுமான தொழில்சார் சூழலில் பணியாற்றக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடக் கேட்போர் கூடத்தில் நேற்று (04) நடைபெற்ற பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் வளாகப் பணிப்பாளர்களின் குழுவான (CVCD) 2026 மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்கலைக்கழகக் கட்டமைப்பை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்கான கொள்கை விடயங்களில் ஆலோசனைகளை வழங்கும் பிரதான ஆலோசனைக் குழுவாக CVCD செயற்பட்டு வருகின்றது.
1979ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்குழுவில் நாட்டின் 22 பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் வளாகப் பணிப்பாளர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
புத்தாக்கம், சர்வதேச அங்கீகாரம் மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் பல்கலைக்கழகங்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் இம்மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான இடங்களாக மாத்திரம் இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல் மற்றும் வேகமாக மாறிவரும் உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்துதல் போன்ற பணிகளையும் பல்கலைக்கழகங்கள் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் மற்றும் ஆராய்ச்சிச் செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இத்தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகங்கள் இணையப் பாதுகாப்பு (Cybersecurity) தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களின் புத்தாக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், புதிய உற்பத்திகள், சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முயற்சிகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் சூழலை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இம்மாநாட்டில் CVCD குழுவின் 500ஆவது கூட்டத்தொடர் நிறைவடைந்ததை நினைவுகூரும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், கல்விச் சமத்துவம், உள்ளடக்கிய கல்வி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்கள், வளாகப் பணிப்பாளர்கள் மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

