தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்
திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் கட்சி வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ராஜ கம்பீரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
“திமுகவுக்குள் தற்போது உட்கட்சி பூசல்களும் அதிகாரத் தேக்கமும் அதிகரித்து காணப்படுகின்றன. மாவட்ட செயலாளர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ள மூத்த நிர்வாகிகள், அடுத்து ஒரு தலைமை உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தில் புதியவர்களை வளரவிடாமல் தடுக்கிறார்கள். அதிகார மையம் ஒரே இடத்தில் தேங்கும்போது அது வளர்ச்சியாக இல்லாமல் வீக்கமாக மாறிவிடுகிறது.
கட்சியில் 70 வயதைக் கடந்த மூத்த தலைவர்கள் நீண்டகாலமாக பொறுப்பில் உள்ளனர். முதியவர்களின் அனுபவமும் வழிகாட்டலும் கட்சிக்குத் தேவைதான் என்றாலும், உடல்நிலை காரணங்களால் அவர்களால் களத்தில் இறங்கி வேகமாக செயல்பட முடிவதில்லை.
இளைஞர்களை வெறும் ஆதரவாளர்களாகவே வைத்திருப்பதால், அவர்கள் அண்ணாமலை, விஜய் போன்ற புதிய தலைவர்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள்காலத்தில் மேடைப் பேச்சுகளின் எல்லை மீறல்கள் எளிதாகப் பதிவாகி விமர்சனங்களை உருவாக்குகின்றன.
இலவச சைக்கிள், மடிக்கணினி, உயர்கல்வி வரை திராவிட இயக்கம் செய்த உட்கட்டமைப்புச் சாதனைகளை இன்றைய ஜென்-சி (Gen-Z) தலைமுறையினரிடம் சமூக வலைத்தளங்கள் வழியே கொண்டு சேர்க்க திமுக தவறிவிட்டது.
மு.க. ஸ்டாலின் 1994 முதலே கடுமையான வாரிசு அரசியல் விமர்சனங்களை எதிர்கொண்டு, மேயர், அமைச்சர், துணை முதல்வர் எனக் கட்டம் கட்டமாக உழைத்து 50 ஆண்டு கால நீண்ட அரசியல் பயணத்திற்குப் பிறகே தலைவரானார்.
ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்குத் தொடக்கத்திலேயே விரைவான முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவதால், மாவட்ட செயலாளர்களும் தங்கள் வாரிசுகளுக்குப் பதவி கேட்கும் சூழல் உருவாகிறது.
உதயநிதி மீது இருக்கும் சில விமர்சனங்களோ அல்லது வெறுப்போ கனிமொழி மீது பலருக்கு இல்லை. அவரது முதிர்ச்சியான அணுகுமுறையும் அனுபவமும் கனிமொழியை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்குகிறது.
கட்சி தலைமை இதனை செய்ய தவறினால் பொதுமக்களிடமிருந்து கட்சி அன்னியப்படும் சூழல் உருவாகும்.
கனிமொழி, கட்சியின் தலைவராக வரலாம் என்று சிலர் கருத்துகளை முன்வைத்தாலும், இதுவும் வாரிசு அரசியலின் ஒரு அங்கம்தானே என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இருந்தாலும் இத்தகைய மாற்றுத் தலைமை மாற்றங்களை தற்போதைய திமுக தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்பதும், பரிசீலனைக்கு உட்படுத்துமா என்பதும் பெரிய கேள்வியாகவே உள்ளது” என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.