எயார் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனையில் பாதக முடிவு: உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை வெளியீடு
புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.
இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.
ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.