நுவரெலியாவில் கனமழை; மக்கள் அவதி.!
நள்ளிரவு பெய்த கனமழையால் 55 குடும்பங்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இச் சம்பவம் நுவரெலியா மாவட்டத்தில் இருவேறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்திற்கு உரித்தான பிலக்வாட்டர கெனில்வத்த பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் 26 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் இன்று அதிகாலை வேளையில் பாதுகாப்பாக இடம் பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்க்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 30 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் கங்க இகல கோரலை பகுதியில் 196.6 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.
கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.
அரநாயக்க பகுதியில் 182.6 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. வட்டவளை பகுதியில் 163.2 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.