பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடத்தினை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை.!
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் கௌசல்யா யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது யாழ். அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பொழுது இதனை கூறியுள்ளார்.
அங்கு சென்று யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார். இதன் பொழுது வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கூறப்பட்டது.
இதன்போது பதிலளித்த பிரதியமைச்சர்,
பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து அதன்பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்பட முடியாமல் போனது அதன்பின்னர் இன்றுவரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர், பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர், யாழ். தபால்நிலைய பிரதம தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக் கல்லூரியின் பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.