கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்!
கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது.
அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சிறைக்குள், கைதிகள் தங்களுக்குள்ளேயே ஒரு சுவாரசியமான அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இங்கு செய்திகளை உடனுக்குடன் நேரில் கொண்டு சேர்க்கும் விரைந்து செல்லும் கைதிகள், காவலர்களுக்கு உதவும் திடகாத்திரமான கைதிகள் அடங்கிய சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் உணவுகள், தின்பண்டங்கள் விற்கப்படும் ‘சந்தை’ ஆகியவை கைதிகளாலேயே நடத்தப்பட்டு வருகின்றன.
சிறையின் தளர்வான விதிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கைதிகள் உருவாக்கியுள்ள ‘ஜெயில் டைம் ரெக்கோர்ட்ஸ்’ (Jail Time Records) என்ற இசை கலையகம் மற்றும் லேபிள் நிறுவனம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
சிறைக்குள் இருக்கும் வியர்வை சிந்திப் பாடும் ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்து உருவாகும் பாடல்கள், உலக அளவில் பலரது வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சிறைக்குள்ளும் வெளியிலும் அஞ்சப்படும் குழுத்தலைவரான எம்பரர் பாடிய இசை காணொளி, யூடியூப்பில் 24,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அத்துடன், தென்னாபிரிக்கா, அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் அவர்களின் பாடல்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
தாங்கள் அந்த நான்கு சுவர்களைப் பற்றி சிந்திப்பதில்லை.
இசையின் வழியே சுதந்திரத்தைக் காண்கிறோம், என்று இந்த அமைப்பின் இணை நிறுவனரும் முன்னாள் கைதியுமான ஸ்டீவ் ஹாப்பி தெரிவித்துள்ளார்.
ஜெயில் டைம் ரெக்கோர்ட்ஸ்’ என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்ட ஆவணப்படம், நியூ பெல் சிறைக்குள் ஆறு ஆண்டுகளாகப் படமாக்கப்பட்டது.
நியூயார்க்கில் அண்மையில் நடைபெற்ற மதிப்புமிக்க ‘டிரிபெகா திரைப்பட விழாவில், சிறந்த ஆவணப்படம் உட்பட மூன்று முக்கிய விருதுகளை இந்தப் படம் வென்றுள்ளது.
கொள்ளை வழக்கில் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கெமரூன் ஜனாதிபதி பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர் ‘ஸ்டோன்’, இதில் பாடிய ராப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிறையில் இருந்து தனது இளம் மகளைத் தொடர்புகொள்ள முடியாமல் அவர் தவிக்கும் தவிப்புகளும் இதில் படமாக்கப்பட்டுள்ளன.
2018-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலையகம் மூலம் கிடைக்கும் இலாபத்தில் பாதித் தொகை நேரடியாகப் பாடல்களைப் பாடும் கைதிகளுக்கே வழங்கப்படுகிறது.
மீதித் தொகை மீண்டும் இசை உபகரணங்கள் மற்றும் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.
2022-ஆம் ஆண்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) அறிக்கையின்படி, 1,000 கைதிகள் இருக்கக்கூடிய இந்தச் சிறையில் 4,700-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நோய்ப் பரவல் மற்றும் வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற இந்தச் சிறையில், இசை ஒரு சிறந்த மறுவாழ்வுப் பாதையாக மாறியுள்ளது.
“நாங்கள் எந்த முன்முடிவும் இன்றி சிறைக்குள் நுழைகிறோம்.
இசையானது கைதிகள் தன்னை சுய-பரிசோதனை செய்து கொள்ளவும், தங்களை நல்வழிப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது,” என்று இதன் இணை இயக்குநர் டியோன் ரோச் கூறியுள்ளார்.
சிறை அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த இசை முயற்சிக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.
தற்போது பெண் கைதிகளும் இதில் இணைந்து பாடல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.