சமூக ஊடகக் கட்டுப்பாடு தொடர்பில் தனிநபர் முன்மொழிவை அரசு அலட்சியப்படுத்துகிறது!
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான தனிநபர் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும், அரசு அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாகச் செயற்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் மிஹெரிவிக்கையில்,
“உலக நாடுகள் சிறுவர்களின் பாதுகாப்புக்காகச் சட்டங்களை இயற்றிவரும் நிலையில், இலங்கையில் அரசு மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துகின்றது. எதிர்க்கட்சித் தரப்பால் தயாரிக்கப்பட்ட சட்டத் திருத்தம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள போதும், அரசு எதுவும் அறியாதது போல் மௌனம் காக்கின்றது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசு முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. காலிபணியிடங்களை நிரப்புவதை விடுத்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைச் சீர்குலைப்பதாகும். இதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மின்சாரக் கட்டணம் 45 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலை சுமார் 150 ரூபாவால் அதிகரித்து, பணவீக்கமும் உயர்ந்துள்ளதால் சாதாரண மக்களும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஜனரஞ்சகத்தன்மை 75 சதவீதம் என அரசு கூறுமாயின், ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயக ரீதியிலான அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் வீழ்ச்சிக்கு ராஜபக்ஷ முகாமே பொறுப்பாகும். 2029 இல் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதுடன் சஜித் பிரேமதாஸ அடுத்த தலைவராக உருவெடுப்பார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான பேச்சுகள் சுமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.