இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு : 10 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 15க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிம் மாநிலத்தின் அமைந்துள்ள தீஸ்தா கட்டம்-VI (Teesta Stage-VI) நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுரங்கத்துக்குள், பாறைகளுக்கு இடையில் தேங்கியிருந்த மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட போது, திட்டப் பணிகளுடன் தொடர்புடைய பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் சுரங்கத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சுரங்கத்திற்குள் காணப்படும் நச்சு வாயுக்கள், அதிகளவிலான புகை மற்றும் அந்த பகுதியில் நிலவும் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.