கர்நாடகாவில் தவளைகளுக்குத் திருமணம் – மழையை வேண்டி வினோத வழிபாடு!
இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன் விவசாயப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடிநீருக்காகப் பெண்கள் தினமும் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் நிலை தொடர்வதோடு, மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன் கால்நடைகளும் சந்தித்து வருகின்றன.
இந்தநிலையில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அந்த பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி வினோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு தவளைகளைப் பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமணம் செய்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.
இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறுகையில், “வறட்சி காலங்களில் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கையாகும்.
தற்போது கடும் நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்” எனத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.