செம்மணி புதைகுழியில் மண்டையோடுகள் இன்றி மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்.!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதிதாக 13 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சில மனித என்புத் தொகுதிகள் மண்டையோட்டுத் தொகுதி இன்றிக் காணப்பட்டன.
இதேவேளை, நேற்றைய அகழ்வின்போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3 என்புத் தொகுதிகள் உட்பட மொத்தமாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வின்போது சில மனித என்புத் தொகுதிகள் மண்டையோட்டுத் தொகுதி இன்றிக் காணப்பட்ட அதேவேளை, மேலும், சில இடங்களில் மண்டையோட்டுத் தொகுதிகள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புகள் மற்றும் மண்டையோட்டுத் தொகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்த மேலதிக தகவல்கள், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவின் ஆய்வுகளுக்குப் பின்னரே உறுதியாகத் தெரியவரும்.