சங்கானையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். இதன்போது, மேற்படி இளைஞர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்துக்கு அருகில் பியர் போத்தல்களும், ஊசி செலுத்தப் பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், மேற்படி இளைஞர் உயிரிழந்து சுமார் மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த இளைஞர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.
சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.