கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க முயன்ற குடும்பப் பெண் மின்சாரம் தாக்கி பலி!
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணிப் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக் குஞ்சை மீட்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வரணிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒன்பது மாதக் குழந்தை உட்பட இரு பிள்ளைகளின் தாயான இவர், நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வரணிப் பகுதியிலுள்ள 12 அடிப் பாதையூடாகக் கூட்டுறவு நிறுவனம் ஒன்றுக்குச் செல்லும் ‘3 பேஸ்’ மின்சார இணைப்பு, அப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாகச் செல்கின்றது. நேற்று, தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க, இரும்புக் கம்பி ஒன்றின் உதவியுடன் மேற்படி பெண் முயன்றுள்ளார்.
அப்போது, கிணற்றுக்கு மேலாகச் சென்ற மின் இணைப்புக்கு அருகில் இரும்புக் கம்பி சென்றமையால், மின்சாரம் பாய்ந்து பெண்ணைத் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கிணற்றுக்குள் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட உறவினர்கள், 10 நிமிடங்களுக்குள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.