நவீன வசதியுடன் மாடு அறுக்கும் மடுவம் புனரமைக்கப்பட்டு கையளிப்பு.!
மன்னார் நகரசபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (18) காலை பயன்பாட்டிற்காக வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தை திறந்து கையளித்தார்.
கடந்த காலங்களில் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்பட்டு வந்த நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாக நகர சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்ட நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மாடுகளை நிலத்தில் போட்டு வெட்டாது நவீன முறையில் செயினில் கொழுவி சுத்தமான முறையில் வெட்டும் வகையில் குறித்த மடுவம் புனரமைக்கப்பட்ட நிலையில் வைபவ ரீதியாக இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடுகள் குறித்த மடுவத்தில் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பில் உரிய அனுமதி பெறப்பட்ட நிலையில் அறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

